关于இயற்கை விவசாயம்
有声读物
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்ததுபோல் நமது இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு கொடுங்கள் நன்றி
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண் துறையில் பணியில் சேர்ந்தவர் நம்மாழ்வார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். நிலங்களில் விதைப்பது வாடிக்கை... இவரோ நிலங்களையே விதைகளாக்கியிருக்கிறார்.
ஆம். இயற்கை வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து, இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி! இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் இவரது பேச்சு மற்றும் எழுத்தில் சமூகம், இயற்கை, கலாசாரம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், மருத்துவம், விளையாட்டு, சுற்றுச்சூழல் என்று பூமிப்பந்திலிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும். இதையே பசுமை விகடன் இதழில் இயற்கை என்ற தலைப்பில் ஒரு வருட காலமாக எழுதி வந்தார். அதன் தொகுப்பே இந்த நூல், பசுமைப் புரட்சி என்ற பெயரால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க நாடகத்தின் அத்தனை அத்தியாயங்களையும் அடித்து நொறுக்கி, அதை எழுதியோரின் முகமூடிகளைக் கிழித்துப்போடும் வேகம்...
அதிபயங்கரம்தான்! இது உழவர்களுக்கான நூல் மட்டுமல்ல... ஒவ்வொரு இந்தியனுக்கானதும் கூட! கடந்த ஐம்பதாண்டு காலகட்டத்துக்குள் இந்திய வேளாண்மை வஞ்சிக்கப்பட்டதன் மூலம்... ஒவ்வொரு இந்தியனும் வஞ்சிக்கப்பட்டதற்கான வரலாற்றுப் பதிவு இது. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு நம்மால் இயற்கையை நோக்கி நடக்காமலிருக்க முடியாது!